நீதிபதி லோயா மர்ம மரணம் …. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும்… ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் மனு!!
பாஜக தலைவர் அமீத்ஷா மீதான சொராபுதின் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயோ மர்ம மரணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டால் தேர்வு செய்யப்படும் சுதந்திரமான அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 15 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.
பாஜக தலைவர் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்ட சொராபுதின் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி லோயா முன்பு நடைபெற்று வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி மராட்டிய மாநிலம் நாக்பூரில் சக நீதிபதியின் மகள் திருமணத்துக்கு சென்ற நீதிபதி லோயா, அங்கு திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சொராபுதின் ஷேக் வழக்குக்கும், அவரது மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவருடைய சகோதரி சமீபத்தில் தெரிவித்தார்.
இதனால், நீதிபதி லோயா மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டாக சந்தித்தனர். காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 15 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், ஜனாதிபதியை சந்தித்தனர்.
இக்குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கினார். 114 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அவர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர். அதில், பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் கையெழுத்திடவில்லை.
அந்த மனுவில் சட்டத்தின் மாட்சிமையை காப்பாற்ற தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் . சி.பி.ஐ. அல்லது தேசிய புலனாய்வு முகமையிடம்) இந்த விசாரணையை ஒப்படைக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டால் தேர்வு செய்யப்படும் சுதந்திரமான அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணைதான் இப்போதைய தேவை. அந்த விசாரணை, சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் நடக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.