"ஜாஸ்" சினிமாஸை 'சசி கேங்' அபேஸ் பண்ணியது எப்படி?
ஜாஸ் சினிமாஸின் 11 திரையரங்குகளும் குத்தகைக்கு பெறப்பட்டதா ? அல்லது விலைக்கு வாங்கப்பட்டதா? என்பது தொடர்பான ஆவணங்களை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என விவேக் ஜெயராமனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.கடந்த 9 ஆம் தேதி சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சிக்குள் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் தங்களு சோதனையைத் தொடங்கினர். இங்கு பிள்ளையார் சுழிபோட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து சசிகலாவின் உறவினர்களுக்குச் சொந்தமான அனைத்து இடங்களுக்குள்ளும் நுழைந்தனர்.
நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், சென்னை மகாலிங்கபுரத்திலுள்ள ஜெயா டி.வி. சிஇஓ விவேக்கின் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா இல்லம், அண்ணா நகரிலுள்ள விவேக் மாமனார் பாஸ்கரன் வீடு என சோதனை மொத்தமும் விவேக்கை குறிவைத்தே நடத்தப்பட்டது.
தொடர்ந்து 5 நாட்களாக அதிரடியாக நடத்தப்பட்ட சோதனை நேற்றுமுன்தினம் நிறைவு பெற்றது. இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் விவேக்கை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கிட்டத்தட்ட 5 மணி நேரத்துக்கு மேலாக அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளால் துளைத்தெடுத்தாக கூறப்படுகிறது. ஜாஸ் சினிமாஸ் எப்போது வாங்கப்பட்டது ? விலை கொடுத்து வாங்கப்பட்டதா ? அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்டதா ? யாரிடமிருந்து வாங்கினீர்கள்? அதற்கான நிதி எங்கிருந்து பெறப்பட்டது? போன்ற கேள்விக் கணைகள் விவேக்கை நோக்கி வீசப்பட்டன.
இதையடுத்து அவர் இரவு 10 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக விளக்கமளித்த விவேக், வருமான வரி துறை அதிகாரிகள் மீண்டும் விசாரித்தால் முழு ஒத்துழைப்பு தருவேன் என்று தெரிவித்தார். மேலும் இதற்காக முறையாக வருமான வரி கட்டியுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இந்நிலையில் நேற்ற ஜாஸ் சினிமாஸ் அதிகாரிகள் 3 பேர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு சென்று, அந்நிறுவனத்தின் வருவாய் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது
இதனையடுத்து ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென விவேக்குக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜாஸ் சினிமாஸின் 11 திரையரங்குகளும் குத்தகைக்கு பெறப்பட்டதா அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டதா என்பது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாஸ் சினிமாஸை விவேக் தரப்பினருக்கு விற்பனை செய்த சத்யம் சினிமாஸ் நிறுவனமும் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.