தப்புமா ஜாஸ் சினிமாஸ்? - ஆடிட்டரும், இளவரசி மகளும் ஆஜர்...!
ஜாஸ் சினிமாஸில் 5 நாட்கள் சோதனையை தொடர்ந்து ஆடிட்டர் நரசிம்மன் சென்னை வருமானவரி புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.
சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை 200 கார்களில் வந்த 1800 அதிகாரிகள் 187 இடங்களில் மேற்கொண்டனர். இதனிடையே சசிகலா உறவினர்கள் 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பொருட்கள், சொத்துக்கள் மதிப்பு பற்றி வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள், ஏராளமான நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், விவேக்கிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? என வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சசிகலா அண்ணன் மகன் விவேக்குக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸில் 5 நாட்கள் வருமானவரி சோதனை நடந்த நிலையில், விளக்கமளிக்க வருமானவரித் துறை சம்மன் அளித்துள்ளது. இதற்காக பதிலளிக்க ஜாஸ் சினிமாஸ் ஆடிட்டர் நரசிம்மன் ஆஜராகியுள்ளார்.
இதேபோல் மிடாஸ் மதுபான ஆலைகளின் இயக்குநர்களில் இளவரசி மகள் ஷகிலாவும் ஒருவர். அவரும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.