தமிழகத்தில் ஜெ.வா? பாஜகவா? சி.ஆர். சொல்லும் விடை இதுதான்...!
தமிழகத்தில் நடப்பது பாஜக ஆட்சிதான் என்றும், தமிழிசை சௌந்தரராஜன் பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கிறார் என்றும் டிடிவியின் தீவிர ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான, சென்னை, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை என பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நேற்று காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை முடித்துக் கொண்டதாகவும், மீதமுள்ள 147 இடங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 பேர் சோதனை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே அதில் டிடிவி வீடு மற்றும் அலுவலங்களும் அடங்கும். இந்த சோதனை குறித்து டிடிவி தினகரனின் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படும் சோதனை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சி.ஆர்.சரஸ்வதி இன்று சென்னை, பெசன்ட் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடப்பது பாரதிய ஜனதா அரசுதான் என்றும் ஜெயலலிதா அரசு அல்ல என்றும் கூறினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து கேள்விக்கு பதிலளித்த சி.ஆர்.சரஸ்வதி, பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைக்கிறார் தமிழிசை என்று கூறினார். மேலும் பேசிய அவர் மாறு வேடத்தில் வந்து பிடிக்க நாங்கள் என்ன தீவிரவாதிகளா? என்றும் வருமான வரித்துறையின் இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.