அப்போலோ செல்வதற்கு 2 நாட்கள் முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது! டாக்டர் சிவக்குமார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவி, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னரே லேசான காய்ச்சல் இருந்தது என்று டாக்டர் சிவக்குமார் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி தலை9மையில் விசாரணைக்கு தமிழக அரசு
உத்தரவிட்டிருந்தது. இதன்படி பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் குடும்ப டாக்டர் சிவகுமாரிடம், விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த 8 ஆம் தேதி அன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளில் அவர் வீட்டில் இருந்ததுடன், அப்போலோ மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று அவருக்கு
அளிக்கப்படும் சிகிச்சை பற்றிக் கேட்டறிந்தவர் சிவக்குமார் என்பதால் அது குறித்த சான்றுகளை அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டிருந்தார்.
அந்த வகையில், டாக்டர் சிவக்குமாருக்கு மீண்டும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று 2-வது முறையாக டாக்டர் சிவக்குமார், விசாரணை
ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
விசாரணை ஆணையத்தில் விளக்கமளித்த பின்பு டாக்டர் சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்னரே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது என்றார்.
வீட்டில் திடீரென மயக்கமடைந்ததால் முதலுதவி அளித்த பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் போது உடனிருந்ததாக டாக்டர்
சிவக்குமார் கூறினார்.