முதலமைச்சர் ஜெயலலிதா, தேர்தல் படிவத்திலல் கைரேகை பதிவு செய்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் உள்ள சுமார் 800 வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு தேர்தல் பணி குறித்து 3 கட்ட பயிற்சிஅளிக்கப்படும். முதல்கட்ட பயிற்சி இன்று நடக்கவுள்ளது.

26ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றே தொகுதிக்கு தலா ஒரு செலவீனப் பார்வையாளர் வந்துவிட்டனர். பொதுப் பார்வையாளர்கள் 3ம் தேதி வருகிறார்கள். சில நாட்களில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் போலீஸ் பார்வையாளராக வரவுள்ளனர். 5ம் தேதி, வேட்பாளர் இறுதிப்பட்டியல் பற்றிதெரியவரும். அதன்பிறகு தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் படம், பெயர், சின்னம் ஒட்டும்பணி 7ம் தேதி தொடங்கும்.
மேற்கண்ட தொகுதிகளுக்கு தலா 4 கம்பெனி துணை ராணுவம் வரவுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்பே அவர்கள் வருவார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கையெழுத்து போடுவதற்கு பதிலாக பெருவிரல்ரேகை பதிவு செய்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று அந்த படிவங்கள் கொடுக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறைதான். எந்த பிரச்சனையும் அதில் இல்லை. 31ம் தேதி வரை அந்த தொகுதிகளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை மாலையுடன் வேட்புமனு தாக்கல் முடியும். 3ம் தேதிவேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 5ம் தேதி வரை வேட்புமனு வாபஸ் பெற வாய்ப்பு தரப்படும்.
5ம் தேதி மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேட்சை வேட்பாளருக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
