ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக்க வேகம் காட்டும் எடப்பாடியார் அரசு... நிலத்துக்கான இழப்பீட்டை செலுத்திய அரசு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக்க, நிலத்தை கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக இருவரையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தங்களை வாரிசுகளாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்ல வீட்டின் சாவியைக் கேட்டு தீபாவும் தீபக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற நிலத்தை கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.
மொத்தம் 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவு கொண்ட ஜெயலலிதாவின் வேதா நிலையத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரித் தொகையும் பாக்கி உள்ளது. இந்தத் தொகையையும் அரசு செலுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.