ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம்தான் வ.உ.சி.யை விழவைத்தது. அந்தக் காலத்திலேயே இலவசம் பல பேரை வீழ்த்தியிருக்கிறது என்பதை தூத்துக்குடி மண் நமக்கெல்லாம் உணர்த்தி உள்ளது என்று தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

'கப்பலோட்டிய தமிழன்' என்றழைக்கப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த தினத்தையொட்டி ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வ.உ.சி. உருவச்சிலைக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாட்டுக்காகப் போராடிய எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளையும் இளைஞர்கள் படிக்க வேண்டும். அவர்களுக்கு நாம் ரசிகர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இல்லையென்றால் இன்று நாம் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்க முடியாது.
தூத்துக்குடியிலிருந்து கப்பல் விட்டு இந்தியாவுக்கே வழிகாட்டியவர் வ.உ.சி.. வ.உ.சி.யின் சுதேசி கப்பல் அவரை வாழ வைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம்தான் அவரை விழவைத்தது. அந்தக் காலத்திலேயே இலவசம் பல பேரை வீழ்த்தியிருக்கிறது என்பதை தூத்துக்குடி மண் நமக்கெல்லாம் உணர்த்தி உள்ளது. அவர் மறைந்து பிறகு அவரைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலேயே நாட்டுக்காகப் பாடுபட்டு, கடைசிக் காலத்தில் மண்ணெண்ணெய் விற்றுக் கடனாளி ஆனார்.
அந்த நேரத்தில் அவருக்கு உதவி செய்யக்கூட யாரும் இல்லை. மொழிக்காகவும் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் இருந்தால், அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய நாம் பழகிக்கொள்ள வேண்டும். நான் ஆளுநராக உள்ள இரண்டு மாநிலங்களிலும் விநாயகர் சிலையைப் பொது இடங்களில் வைக்கவும் விநாயகர் ஊர்வலத்துக்கும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred