விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் - கிடுக்குபிடி போடும் வருமானவரித்துறை!!
கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.
இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.
மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து இதுகுறித்து ஏற்கனவே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், இன்று மாலை நேரில் ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ளது. இந்த விசாரணையில் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் சிக்கிய ஆதாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே விஜயபாஸ்கரின் சமையல்காரர் சுப்பையா பெயரில் ஆவணங்கள் இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடதக்கது.