பாஜகவில் அண்ணாமலைக்கு நெருக்கமாக இருந்த திருச்சி சூர்யா அந்த கட்சியில் இருந்து விலகிய நிலையில், வருகிற 5 ஆம் தேதி அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த சூர்யா சிவா.?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுகவின் மூத்த நிர்வாகியாக இருப்பவர் திருச்சி சிவா, இவரது மகன் திருச்சி சூர்யா திமுக மற்றும் தனது தந்தை மீது கொண்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து அண்ணாமலைக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார். தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்றார். அவருக்கு ஓபிசி அணியில் முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டது. அப்போது பாஜக சிறுபான்மையினர் அணியில் பதவி வழங்குவதில் டெய்சி சரணுக்கும், சூர்யா சிவாவிற்கும் மோதல் ஏற்பட்டது.

பாஜகவில் இருந்து நீக்கம்

இதனால் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட திருச்சி சூர்யா ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்,இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியில் இருந்து தான் விலகுவதாக கூறி திருச்சி சூர்யா அறிவித்தார். இதனையடுத்து சில நாட்கள் அமைதியாக இருந்தவர் கடந்த மாதம் மீண்டும் ஒரு டுவிட்டை வெளியிட்டார், அதில்,கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன் வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும்.

அதிமுகவில் இணையும் சூர்யா சிவா

நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தற்போது திருச்சி சூர்யா அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது. வருகிற 5 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும்..! திடீரென பாஜகவிற்கு எதிராக களம் இறங்கிய திருச்சி சூர்யா