எல்.முருகனை தலைவர் பதவியிலிருந்து நீக்கியது தவறு.. பலிகடா ஆக்கிவிட்டு அமைச்சர் பதவி.. திருமாவளவன் திகுதிகு.!
பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை நீக்கியது தவறு. அது அவருக்கு செய்த அவமதிப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது. அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தில் விசிக பங்கேற்கும்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரிகளுடன் இணைந்து மத்திய போராட்டம் நடத்தினோம். மத்திய அரசின் வறட்டு பிடிவாதம் காரணமாக சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கொரோணா நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். மோடி அரசின் அணுகுமுறையே இதற்கு காரணம். இந்த வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும்.
பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. சாதி, மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உத்தி இது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உத்திகளை செய்கிறது. இப்படித்தான் ஜம்மு காஷ்மீரை மூன்றாகப் பிரித்துள்ளது. வட இந்திய மாநிலங்களை அரசியல் ஆதாயத்துக்காக துண்டு போட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற தமிழ்நாட்டிலும் இது போன்ற முயற்சியை செய்து பார்க்க உள்ளதாக தெரிகிறது.
பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை நீக்கியது தவறு. அது அவருக்கு செய்த அவமதிப்பு ஆகும். அவரால்தான் தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதலாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம் அடிப்படையில் தேசிய அளவில் அனைவரும் அணி திரள்வதை பாஜக ஒருபோதும் விரும்புவதில்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.