ADMK Issue: எதிரிக்கு எதிரி நண்பன்.. சசிகலாவோடு கைகோர்க்கிறாரா ஓபிஎஸ்.? சசிகலா சொன்ன குட்டிக் கதை!
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதை அதிமுக தொண்டர்களோ அதிமுகவுக்கு வாக்களித்தோரோ விரும்பவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக வரலாற்றில் இன்று கறுப்பு நாளாக அமைந்துவிட்ட நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் சசிகலா, புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் சசிகலா ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இடையேயான மோதல் குறித்து குட்டிக் கதை ஒன்றை சொல்லி பேசினார். “அதிமுகவில் தற்போது நடக்கும் சூழ்நிலையை பார்க்கிறபோது கட்சித் தொண்டர்கள் எல்லோரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. கட்சித் தொண்டர்கள் அனைவரும் சுயநலவாதிகளைவிட்டு விலகும் காலமும் வந்துவிட்டது. அதிமுக சட்ட விதிகளின்படி கட்சியின் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒருவரால்தான் கட்சியைக் கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல முடியும்.
இதையும் படிங்க: உங்க சண்டையில் திமுகவை இழுப்பதா.? அதிமுக அலுவலகம் யாருக்கென நீதிமன்றத்தில் நிரூபியுங்க.. ஆர்.எஸ்.பாரதி கடுகடு!
பணபலத்தை வைத்தோ, படைபலத்தை வைத்தோ பதவியைப் பிடிக்கலாம் என்று நினைக்கும்பட்சத்தில் அதை நிராகரிக்கிற காலம் வந்துவிட்டது. அதிமுக பொதுச்செயலாளராக நான் குறிப்பிட விரும்புவது ஒன்றுதான். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஒரு பாலைவனத்தில் குதிரையை ஓட்டி சென்ற வேலைக்காரரும், அதில் சென்ற பயணியும் குதிரையின் நிழலுக்காக அடித்துக்கொண்டார்கள். இதைக் கவனித்த குதிரை, தன்னை வளர்த்தவரிடமே திரும்பி வந்தது. நிஜத்தை மறந்து, நிழலுக்காக சண்டை போட்டுக்கொள்வோரின் கதை இதுதான். இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களை நம்பி ஒரு குதிரைகூட செல்லாது என்பதுதான். இதுதான் நிதர்சனம்.” என்று சசிகலா தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிவிட்டரில் பதவியை மாற்றிய எடப்பாடி பழனிசாமி… அதிமுக பொதுக்குழுவுக்கு பின் அதிரடி!!
பின்னர் சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதை அதிமுக தொண்டர்களோ அதிமுகவுக்கு வாக்களித்தோரோ விரும்பவில்லை. என்னை நாடி ஓ.பன்னீர்செல்வம் வந்தால் அதைப் பற்றி காலச் சூழலுக்கு ஏற்பவே முடிவு எடுக்க முடியும். கட்சியில் ஒட்டுமொத்த தொண்டர்களின் குரல்தான் இறுதியானது ஆகும். அதுதான் வெற்றி பெறும். ஜெயலலிதா காலத்தில் நானும் பல பொதுக்குழுக்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது கட்சியின் வரவு செலவு அறிக்கையை பொருளாளர்தான் வாசிப்பார். அப்படி இருக்கும்போது தற்போது வேறொருவர் வாசித்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று சசிகலா தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா...! விதியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றிய இபிஎஸ் அணி