தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு பாஜகவை சேர்ந்தவர் முதல்வரா..? பழைய வரலாறுகளால் நடுக்கம்..!
பாஜகவை வீழ்த்த ரங்கசாமிக்கு முதல்வர் பதவியை கொடுக்க கூட காங்கிரசும் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது.
புதுவையில் 5 ஆண்டுகளை பூர்த்திசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனது பதவிக்காலம் முடியும் முன்பே கவிழ்ந்தது. இதற்கு பாஜகவே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இல்லாவிட்டால் இது நடந்து இருக்காது.
தற்போது புதுவை பாஜக கூட்டணியில் அமைந்திருப்பதே ரங்கசாமி என்னும் ஒற்றை நபரை நம்பி தான். அவர் மட்டும் இல்லை என்றால் பாஜகவின் பின்னால் எந்த கட்சியும் வந்திருக்காது. அந்த அளவு புதுவையில் வலிமையான நபராக இருக்கிறார் ரங்கசாமி. அதனால் தான் விருப்பம் இல்லை என்றாலும் அவரை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவித்திருக்கிறது. அவரால் தான் முதல்வர் வேட்பாளர் என்ற கனவோடு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வந்த நமச்சிவாயத்துக்கு டிமிக்கி கொடுத்துள்ளது பாஜக.
ஆனால் எங்கே தேர்தலுக்கு பிறகு ரங்கசாமிக்கும் பாஜக டிமிக்மி கொடுத்துவிடுமோ என்ற பயமும் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் பாஜகவின் பழைய வரலாறுகள் தான். பல மாநிலங்களில் கூட்டணியில் இருக்கும் கட்சிகளையே வீழ்த்தி ஆட்சிக்கு வந்திருக்கிறது, அல்லது அந்த கட்சிகளை பலவீனமாக்கி தன்னை பலப்படுத்தி கொண்டிருக்கிறது. தனி மாநிலங்களுக்கே அந்த நிலை என்றால் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுவையில் பாஜக எதுவும் செய்யமுடியும்.
இதனால் தான் எங்கே தேர்தலுக்கு பிறகு ரங்கசாமியையும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி விடுமோ என அவரது கட்சி தொண்டர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் ஒருவேளை பாஜக அவரை வீழ்த்த முயன்றால் ரங்கசாமியை அரவணைத்துக்கொள்ள காங்கிரஸ்- திமுக கூட்டணி தயாராகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பாஜகவை வீழ்த்த ரங்கசாமிக்கு முதல்வர் பதவியை கொடுக்க கூட காங்கிரசும் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது.