வெற்றி பெறப்போவது அதிமுகவா..? திமுகவா..? கோடிக்கணக்கில் நடைபெறும் சூதாட்டம்..!
₹1000ல் இருந்து ஆரம்பிக்கும் சூதாட்டம் கடைசியில் ₹1 கோடி வரை போய் நிற்பதாக கூறுகிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம்தேதி நடந்து முடிந்தது. தொழில்துறை மாவட்டமான கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேரடியாகவும், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவும், பாஜகவும் நேரிடையாகவும் போட்டியிட்டது. கரூர் மாவட்டத்தில்தான் 86.15 சதவீதம் என வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மே 2ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் எந்த கட்சி வெற்றி பெறுவார்கள். எந்த கட்சி ஆட்சி அமைப்பார்கள் என சூதாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொழில்துறை மாவட்டத்தை பொறுத்தவரை வழக்கமாக ஐபிஎல், உலக கோப்பை கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடைபெறும் சமயத்தில்தான் இதுபோன்ற சூதாட்டம் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து இந்த சூதாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ₹1000ல் இருந்து ஆரம்பிக்கும் சூதாட்டம் கடைசியில் ₹1 கோடி வரை போய் நிற்பதாக கூறுகிறார்கள். இந்த சூதாட்டத்தில் பெரும்பாலும் தொழிலதிபர்கள்தான் உள்ளார்கள் என அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.