மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை..? பாஜக மேலிடம் அதிரடி திட்டம்..!
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஏற்கனவே காலியாக உள்ள அமைச்சர் பதவியிடங்கள், ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்களை கையில் வைத்திருப்பவர்கள் என பல அமைச்சகப் பதவியிடங்கள் காலியாக உள்ளன. எனவே புதிதாக 27 பேர் மத்திய அமைச்சர் ஆவார்கள் என்று டெல்லியிருந்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் முக்கிய இடத்தை வகித்துவருகிறார்கள். ஆனால், அவர்கள் டெல்லியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் நோக்கில் யாருக்காவது அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நடந்த முடிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்றால், அவர் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் தோல்வியடைந்ததால், அந்த வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலைக்கு இடம் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎஸ் அதிகாரி பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த அண்ணாமலை, ஓராண்டுக்கு முன்புதான் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்தவுடனே அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி கொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
திராவிட கட்சிகளுக்கு எதிராகத் தமிழகத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினரை கட்சிக்குள் கொண்டு வருவதில் அக்கட்சி உறுதியாக உள்ளது. அதற்கு அண்ணாமலை உதவுவார் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது இளைஞர்கள் ஆதரவு வட்டாரம் அவருக்கு இருந்தது. அதேபோல தமிழகத்திலும் அவரால் உருவாக்க முடியும் என்று பாஜக மேலிடம் நம்புவதாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருப்பதன் மூலம், அந்த வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும் பாஜக மேலிடம் எதிர்பார்க்கிறது. எனவே அண்ணாமலை பாஜக ராஜ்ய சபா உறுப்பினராகி மத்திய அமைச்சராவார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.