கோவை அதிமுகவில் உள்ளடி வேலை..! எஸ்பி வேலுமணிக்கு எதிராக திரும்பிய சீனியர்கள்..! அடுத்தடுத்த நெருக்கடி..!
கடந்த 2011ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சராக பதவி ஏற்ற எஸ்பி வேலுமணி அடுத்த சில மாதங்களிலேயே அந்த பதவியை இழந்தார். அதற்கு காரணம் அப்போது சசிகலாவின் உறவினரான ராவணனுடன் வேலுமணி அதிக நெருக்கம் காட்டியது தான்.
கோவையை சேர்ந்த ரகுநாத் மற்றும் திருவேங்கடம் எனும் இருவர் எஸ்பி வேலுமணி மீது அடுத்தடுத்து கூறி வரும் திடுக் புகார்களின் பின்னணியில் அதிமுக சீனியர்கள் சிலர் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் முறையாக அமைச்சராக பதவி ஏற்ற எஸ்பி வேலுமணி அடுத்த சில மாதங்களிலேயே அந்த பதவியை இழந்தார். அதற்கு காரணம் அப்போது சசிகலாவின் உறவினரான ராவணனுடன் வேலுமணி அதிக நெருக்கம் காட்டியது தான். இதனை தொடர்ந்து மறுபடியும் 2014ம் ஆண்டு எஸ்பி வேலுமணி மறுபடியும் அமைச்சராக பதவி ஏற்றார். அப்போது முதல் அதிமுக ஆட்சி முடியும் வரை வேலுமணி அமைச்சராக இருந்தார். அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் எஸ்பி வேலுமணி தான் நம்பர் 2ஆக இருந்தார்.
ஜெயலலிதா மறைவு வரை கூட எஸ்பி வேலுமணி வெளியே அதிகம் தெரியாத அமைச்சராகவே இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்காக அவருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்த பிறகு தான் வேலுமணியின் கிராப் கிடுகிடுவென உயர்ந்தது. கோவை மட்டும் இன்றி ஒட்டு மொத்த கொங்கு மண்டலம் என்பதையும் தாண்டி கன்னியாகுமரி வரை அதிமுக கட்சிவிவகாரங்களில் வேலுமணி ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்தார். இதனால் அதிமுகவின் ஆரம்ப கால நிர்வாகிகள் பலர் ஓரங்கட்டப்பட்டனர்.
அப்படி ஓரங்கட்டப்பட்ட அதிமுக சீனியர்கள் சிலர் தற்போது ஒன்று சேர்ந்து வேலுமணிக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாக சொல்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவை சேர்ந்த ரகுநாத் என்பவர் எஸ்பி வேலுமணி சுமார் 1500 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்த முறைகேடு செய்துள்ளதாக புகார் அளித்தார். அந்த புகாருக்கு அவர் ஆதாரமாக பல்வேறு ஆவணங்களை கொடுத்திருந்தார். அந்த ஆவணங்கள் அனைத்துமே ஒப்பந்ததாரர்கள் வசம் இருந்து கொடுக்கப்பட்டவை என்று சொல்கிறார்கள்.
எஸ்பி வேலுமணியுடன் நெருக்கமாக இருந்தர ஒப்பந்தாரர்களிடம் இருந்து அவருக்கு எதிரான ஆவணங்கள் கிடைத்ததன் பின்னணியில் தான் அந்த அதிமுக சீனியர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது குறிப்பிட்ட சில கொங்கு மண்டல ஒப்பந்த தாரர்களை தொடர்பு கொண்டு, அமைச்சராக இருந்த வேலுமணி சிறை செல்வது உறுதி, அப்போது அவருடன் இணைந்து செயல்பட்ட ஒப்பந்ததாரர்களையும் திமுக அரசு சும்மா விடாது, எனவே தற்போது முதலே திமுகவின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்தால் தப்பலாம் என தூண்டில் போட்டுள்ளனர். இந்த தூண்டிலில் சிக்கிய சில ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே அதிமுக சீனியர்கள் வேலுமணிக்கு எதிராக வலை விரித்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதே போல் மற்றொரு ஒப்பந்ததாரரான சந்திரசேகர் என்பவர் தன்னிடம் வேலுமணி ஒரு கோடி ரூபாய் பெற்று ஏமாற்றிவிட்டதாக ஒரு புகாரை கூறி வருகிறார். இவரும் தற்போது திமுகவில் உள்ளார். ஆனால் இவர் முன்னாள் அதிமுக அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரனுக்கு நெருக்கமாக இருந்தவர். தற்போது திமுகவில் இணைந்துள்ள இவரையும் அதிமுகவை சேர்ந்த சிலர் தான் தூண்டிவிட்டு வேலுமணிக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் வேறு சில விவகாரமான விஷயங்களிலும் வேலுமணி பெயரை இழுத்துவிட கொங்கு மண்டலத்தில் வேலுமணியால் பாதிக்கப்பட்ட அதிமுகவினரே சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் விரைவில் இந்த விவகாரங்கள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்கள்.