வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு குறித்து தான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு திரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். 

மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று முன் தினம் செளடார்பட்டி என்ற கிராமத்தில் பிரச்சாரம் செய்தபோது, “வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானதுதான். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னரே அனைவருக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்கப்படும். இது ஆறு மாத காலத்திற்குதான்” எனப் பேசினார். இதுதொடர்பான ஊடகங்களில் வெளியானது. இதனையடுத்து தேர்தலுக்காக அதிமுகவும் பாமகவும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று ஏமாற்றுவதாக திமுகவினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு விமர்சித்தனர். 
இந்நிலையில் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எல்லா தரப்பு மக்களையும் ஒரு தாய் வயிற்று பிள்ளையாக கருதி முதல்வர் சேவையாற்றி வருகிறார். ஆனால், பிற்பட்ட நலத்துறையினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம், 7.5 சதவீதம், 2.5 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக உள்ளது. சட்டமன்றத்திலே நிறைவேற்றும்போது அந்த அமைச்சரவையில் நான் பங்கேற்ற காரணத்தினாலே முதலமைச்சரின் எண்ணங்களை விளக்கங்களாக சொல்வதற்கு பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது. 
எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இதை அவதூறு பிரசாரமாக கொண்டு செல்கிறார்கள். எங்கள் மீது தொடர்ந்து பழி சுமத்துகிறார்கள். ஏதோ ஒரு சாராருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாகவும் நாங்கள் திட்டமிட்டு செய்தது போலவும் அவதூறு செய்திகளை சமூக ஊடங்களில் பரப்புகிறார்கள். தேர்தல் காலத்தில் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால், பல்வேறு பகுதிகளில் செல்கிறபோது அங்கே விளக்கத்தை கொடுத்தேன். அந்த விளக்கத்தில் நான் என்ன சொன்னேன் என்றால், தற்போதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. ஆறுமாத காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடையும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இன்று முதல்வர் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் உள் ஒதுக்கீடு அறிவித்திருந்தார். அதற்கு அரசியல் ரீதியாக களங்கம் கற்பித்து பல்வேறு அவதூறு பிரச்சாரங்கள் செய்யப்படும் காரணத்தினால் அதற்கு உரிய விளக்கங்களை தெரிவிக்கும்போது நான் சொன்ன உண்மை செய்தியை மறைத்து திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும், முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று என்னுடைய பிரச்சாரத்தை அரசியல் உள்நோக்கத்தோடு திரித்துக் கூறப்பட்டுள்ளது. இதை நான் கண்டிக்கிறேன். சாதி சமய வேறுபாடு இன்றி சமதர்மக் கொள்கையை உருவாக்குவதுதான் அதிமுகவின் ஒரே லட்சியம், ஒரே கொள்கை.
இந்த சமுதாயத்தில் கல்வியிலே பொருளாதாரத்திலே பின் தங்கியவர்கள், கல்வி பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று சமதர்ம சமுதாயம் உருவாக்குவதற்காகதான் இன்றைக்கு சாதி ரீதியான கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சாதி ரீதியான மக்கள் கணக்கெடுப்பு வந்த பின்னர், அதற்கு ஏற்ற வகையில் பின்தங்கிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கு தேவையான இட ஒதுக்கீடுகளை தேவையான அளவு கொடுத்து அனைத்துப் பிரிவினரும் சமமாக கருதப்படுவார்கள். அவர்கள் அரவணைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதுதான் சத்தியம். இதுதான் அதற்குரிய உண்மையான விளக்கம்.
சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய கருத்து ஆறு மாதத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பு முடிவுற்ற பின்பு அவரவர்களுக்கு ஏற்ற உரிய பிரதிநிதித்துவத்தில் இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதுதான். அதிமுக அரசின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிற சமுதாய மக்களின் மன வருத்தத்தை ஏற்படுத்துகிற வகையில் யாரேனும் செய்திகளை வெளியிட்டால் அதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்” என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.