அவர அரெஸ்ட் பண்ணிட்டீங்களா ? இப்பதான் எனக்கு மகிழ்ச்சி !! சிதம்பரம் கைதானதை கொண்டாடிய பெண் தொழிலதிபர் !!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அவருக்கு 27ஆம் தேதி மீண்டும் சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் கைதுக்கு முக்கியமான காரணமான இந்திராணி முகர்ஜி இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்திதான். இப்போது அனைத்து தரப்பிலும் சிதம்பரம் குறிவைக்கப்படுகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீனில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.