மாதம் மாதம் இவர்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத் தொகை.. இவர் சேகர் பாபு இல்ல, செயல் பாபு.. முதல்வர் ஸ்டாலின் ஹாப்பி.
சேகர்பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், ஏராளமான கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அவர் அதிரடியாக மீட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்பதைவிட செயல் பாபு என்றே கூறலாம் என அவர் வெகுவாக பாராட்டினார்.
சுமார் 12 ஆயிரத்து 959 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை 1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. அதே போல இந்து அறநிலை துறையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நீண்டநாள் கனவு திட்டங்களில் ஒன்றான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அதற்காக பயிற்சி முடித்து காத்திருப்பவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி காட்டியுள்ளார்.
இது பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்ற திட்டமும் தொடங்கப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை 1000 வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் ஏராளமான கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் பூசாரிகள் கலந்துகொண்டனர். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் இதற்காக 13 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் இன்றுமுதல் பயனாளிகளுக்கு மாத உதவித் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, மேலும் சரக உதவி ஆணையர்கள் தங்கள் சரகத்தில் உள்ள ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் செயல்படும் கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பக்தர்கள் மற்றும் பூசாரிகளை அடையாளம் கண்டு இக்கடிதத்துடன் இணைக்கப்பட்ட படிவங்களை தொகுத்து 17-ஆம் தேதிக்குள் தவறாது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய அறநிலை துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு, அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் மிகுந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளத. இந்தத் துறைக்கு அமைச்சராக வாய்த்துள்ள சேகர்பாபு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், ஏராளமான கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அவர் அதிரடியாக மீட்டு வருகிறார். அவரை சேகர்பாபு என்பதைவிட செயல் பாபு என்றே கூறலாம் என அவர் வெகுவாக பாராட்டினார்.