திமுகவுக்கு வாக்களித்தால் அதிமுகவுக்கு லைட் எரிகிறதா..? அதிர்ச்சியில் வாக்காளர்கள்..!
ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், அவிநாசியில் சபாநாயகர் தனபாலும் போட்டியிடுகின்றனர். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே சில சச்சரவுகளும் அரங்கேறி வருகின்றன. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய உடன் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்னைகள் ஏற்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் தொகுதியான ராயபுரத்திலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே 52 வாக்குகள் பதிவானதாகக் காட்டியது அதிர்ச்சியளித்தது. இதனை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தனர். அதற்குப் பிறகு பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறும் ஆங்காங்கே நிகழ்ந்துவருகின்றன.
இச்சூழலில் ஆவடி, அவிநாசி தொகுதிகளில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது திமுகவிற்கு வாக்கு செலுத்த அந்த பட்டனை அழுத்தினால் அதிமுகவில் லைட் எரிந்திருக்கிறது. மேலும் விவிபேட் இயந்திரத்தில் இரட்டை இலை என காட்டியிருக்கிறது. வாக்காளர்களின் புகாரையடுத்து அவினாசி தொகுதிக்கு உள்பட்ட கனியாம்பூன்டியில் 312ஆவது வாக்குச்சாவடியிலும், ஆவடி விவேகானந்தா பள்ளியில் உள்ள 123வது வாக்குச்சாவடியிலும் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆவடியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும், அவிநாசியில் சபாநாயகர் தனபாலும் போட்டியிடுகின்றனர். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.