கண்ணுமண்ணு தெரியாம ரீ-டிவிட் செய்வீங்களா... அப்ப இனி ரிவிட்டுதான்... எச்சரிக்கை!
அவதூறுக் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் எழுதுவது மட்டுமல்ல, அதை ரிடிவீட் செய்தாலும் அது குற்றம் தானாம்! காரணம், அவதூறுக் கருத்துக்களை ரீ-டிவீட் செய்தால், அதுவும் ஒரு அவதூறாகவே கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒரு அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார். அத அவதூறு வழக்கை விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம். இந்த விசாரணையின் போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சந்தா உள்ளிட்ட மேலும் 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அவர்கள், தாங்கள் தனியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்தை ரீ-டிவீட் மட்டுமே செய்ததாகவும் கூறினர். மேலும், தாங்களாக, எந்த விதமான அவதூறு கருத்துகளையும் பதிவிடவில்லை என்றும், ராகவ் சந்தா தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ரீ-டிவீட்டுகளை அவதூறாகக் கருத சட்டத்தில் இடம் இல்லை என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
இந்நிலையில், அடுத்தவர் சொல்கிறார்கள் என்று சொல்லி, ஒரு அவதூறுக் கருத்தை நாம் பரப்பலாமா? ரீ-டிவீட் என்ற பெயரில், எத்தகைய தரக்குறைவான மற்றும் ஆபாசமான கருத்துக்களையும் யார் வேண்டுமானும் பரப்பலாமா என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவதூறுக் கருத்துக்களை ரீ-டிவீட் செய்தால் அவற்றையும் அவதூறாகவே கருதமுடியும் என்று தெரிவித்தனர்.
பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில், ஒருவரின் கருத்தை அப்படியே பார்வர்ட் செய்து, தாங்கள் எழுதாவிட்டாலும், இது பார்வர்ட் மெசேஜ் என்று குறிப்பிட்டு மோசமான, சமூக விரோத, தேச விரோத கருத்துகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தாங்கள் அந்தக் கருத்துகளை எழுதவில்லை என்றும், வெறுமனே பார்வர்ட் தான் செய்துள்ளோம் என்றும் கூறி தப்பித்து வருகின்றனர். இனி இது போன்ற செயலும்கூட, நீதிமன்றத்தின் தண்டனைக்கு அல்லது கண்டனத்துக்கு உள்ளாகக் கூடும் என்று கருதப் படுகிறது.