தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக உள்ளது என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்கு பதிலாக வி பி - ஜி ராம் ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை மத்திய அரசு கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். புதிய சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும் கடுமையான எதிர்ப்பையும் தெரிவிப்பதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்தங்கிய மக்களுக்கு வருமான ஆதாரம்

பாசனத்திற்கு ஜீவ நதிகள் இல்லாத பகுதிகளிலும், விவசாயப் பகுதிகளில் மழை குறைவாக பெய்யும் காலங்களிலும், பட்டியல் இன மக்கள் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்தகைய வேலை முறையே வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது என்று தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

125 நாட்கள் வேலை வரவேற்கத்தக்க அம்சம்

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

அடிப்படை தன்மையே மாறுகிறது

இந்த சட்டமுன்வடிவில், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாநிலவாரியான திட்ட ஒதுக்கீடுகளை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. இது செலவினங்களுக்கு வரம்பு விதித்து, கூடுதல் செலவுகளை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும் கோருவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தேவை அடிப்படையிலான தன்மையிலிருந்து மாறுபடுகிறது.

கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு இன்னல்

காலநிலை மற்றும் புவியியல் காரணங்களால் தேவை அதிகமாக உள்ள தமிழ்நாட்டில், இத்தகைய நிர்ணயம் (உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடுவது) வேலை நாட்களையும் கூலியையும் குறைத்து, கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும் என்றும் ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி சுமை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் மத்திய அரசு ஏற்கிறது. மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக் கூடாது

MGNREGA திட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரப்பரவல் பற்றிய தொலைநோக்குப் பார்வையை சிதைக்கும் வண்ணம் உள்ளது. இந்த சட்டமுன்வடிவானது மாநிலங்களின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கான வாய்ப்பைக் குறைப்பதுடன் ஜனநாயகத்தை மேம்படுத்த தடையாக அமைந்துவிடும் என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதையும் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய‌-மாநில உறவில் விரிசல்

கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்து, தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மத்திய‌-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வலுப்படுத்த வேண்டும்

எனவே, 2025 விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவினை செயல்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, திருத்தங்கள் மூலம் வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது மற்றும் விவசாயப் பருவகால இன்னல்களைத் தவிர்ப்பது போன்ற பிற நேர்மறையான அம்சங்களை சேர்த்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.