60 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பாமக ஆட்சி... 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே டார்கெட் குறித்த ராமதாஸ்.!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை கைப்பற்றலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. இந்த இரு தேர்தல்களிலும் பாமகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. இதற்கிடையே தமிழ்ப் படைப்பாளிகள் பேரிக்கம் சார்பில் பாடாண்தினைக் கவியரங்கம் இணையவழி மூலம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டிதான் வாங்கினோம். நம் மிரட்டலுக்கு பணிந்துதான் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் கூட்டணியே வேண்டாம் என நான் கூறினேன். அதேவேளையில் தமிழக அரசு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீடு நமக்கு போதுமானதல்ல. 15 சதவீத இடஒதுக்கீடு பெறுவதே நம்முடைய நோக்கமாக இருந்தது.
தமிழகத்தில், தமிழ் எங்கும் இல்லாத சூழல் உருவாகிவிட்டது. தமிழகத்தில் தமிழ் உள்ளது என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். தமிழ் வளர்ச்சிக்காகவும், மது விலக்கிற்காகவும் நாம் கோட்டையை கைப்பற்ற வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஆட்சியை கைபற்றலாம். கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலையை தொடங்குகள்” என்று ராமதாஸ் பேசினார்.