நடிகர்கள் தலைவராவது நாட்டுக்கு கேடு! ரஜினி, கமலுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் கருத்து!
நடிகர்கள் அரசியலுக்குள் வந்து தலைவர்கள் ஆவது, எனது நாட்டுக்கு பேரழிவு என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளது சர்சையாக உருவெடுத்துள்ளது.
இதன் மூலம் தமிழக அரசியலில் களமாட காத்திருக்கும் உச்ச நடிகர்கள் கமல் ஹாசன், ரஜினி காந்த் ஆகியோரை மறைமுகமாக தாக்கி இந்த கருத்து கூறப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
கவுரி லங்கேஷ் கொலை
கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளரும், முற்போக்கு சிந்தனையாளர், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
மோடி மீது தாக்கு
கவுரிலங்கேஷ் கொலை குறித்து கடந்த அக்டோபர் மாதம் கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ், “ ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். தவறான வாக்குறுதிகளை அளித்து எங்களை நம்பவைக்க முடியாது. என்னைக் காட்டிலும் பிரதமர் மோடி மிகச்சிறந்த நடிகர். நான் நடிகன் என்பதால், யார் நடக்கிறார் என்பதைக் கூற முடியும்’’ என்று பேசி இருந்தார்.
ரூபாய்நோட்டு தடை
இதற்கிடையே கடந்த 8-ந்தேதி ரூபாய் நோட்டு தடையின் முதலாம் ஆண்டு வந்ததையடுத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரகாஷ் ராஜ், “ ரூபாய் நோட்டு தடை நம்காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் கருப்புபணத்தை பளபளக்கும் வெள்ளை நோட்டுகளாக மாற்றிக்கொண்டார்கள். அமைப்பு சாரா தொழிலில் உள்ள மக்கள் கடுமயைாக பாதிக்கப்பட்டனர்’’ என்று தெரிவித்து இருந்தார்.
எண்ணம் இல்லை
இந்நிலையில், பெங்களூரில் நேற்றுமுன்தினம் நிருபர்களைச் சந்தித்து பிரகாஷ் ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டபோது, அவர் பதில் அளிக்கையில் “ எனக்கு அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் இல்லை’’ என்றார்.
விரும்பவில்லை
அரசியலில் நடிகர் கமல் ஹாசன், ரஜினிகாந்த் வருவது குறித்து அவரிடம் கேட்டபோது, “ அரசியலில் நடிகர்கள் களமிறங்குவதை நான் விரும்பவில்லை. ஏனென்றால், நடிகர்களுக்கு என தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆதாலால், நடிகர்கள் தங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றபொறுப்பு உணர்ந்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பேரழிவு
அதேசசமயம், நடிகர்கள், அரசியலில் மிகப்பெரிய அரசியல் தலைவர்களாக வருவதையும் நான் ஆதரிக்கவில்லை. சினிமா நடிகர்கள் அரசியலில் நுழைந்து மிகப்பெரிய தலைவர்களாக உருவாவது எனது நாட்டுக்கே பேரழிவு ’’ என்று கடுமையாக விமர்சித்தார்.
திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது குறித்து கேட்டபோது, அவர் பதில் அளிக்கையில், “ திரையரங்குகளில் தேசிய கீதத்தை ஒலிபரப்பச் செய்து, அங்கே ஒருவர் எழுந்துநின்று தான் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.