சினிமாவில் நடித்திருந்தால் நம்ம சின்னையா தாங்க இன்னிக்கு CM..! அன்புமணிக்காக வரிந்து கட்டும் ஜாக்குவார் தங்கம்
ஒருவேளை பெரிய ஐயா திட்டுவாங்களோனு வரலைனு நினைக்கிறேன். சினிமாவுக்கு வந்திருந்தால் இன்னைக்கு அவர்தான்யா சிஎம்
நான் 20 வயதுக்கு முன்பே தயாரிப்பாளராக இருந்திருந்தால் சின்ன ஐயாவை ஹீரோவா போட்டு படம் எடுத்திருப்பேன் என சினிமா தயாரிப்பாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாகுவார் தங்கம் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி ஆற்றைப்பற்றி சில சந்தேகம் இருந்தது. அதை சின்ன ஐயாவிடம் கேட்டேன். எனக்கே ஆச்சரியமாகி விட்டது. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தாமிரபரணி ஆற்றைப்பற்றி சொன்னார். நானும் தாமிரபரணி மண்ணில் பிறந்தவன். தூத்துக்குடியில் வாழந்தவன். ஆனால் எனக்கு தெரியவில்லை. ஆனால் சின்ன ஐயாவிற்கு தெரிகிறது. அப்போ இந்த நாட்டை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? உண்மையிலே நான் சொல்றேன்.
20 வருடங்களுக்கு முன் நான் தயாரிப்பாளராகி இருந்தால் சின்ன ஐயாவை ஹீரோவா போட்டு படம் எடுத்திருப்பேன். நீங்கள் ஒன்றை உணர வேண்டும் சினிமாத்துறையில் இருப்பவர்கள் மேக்-அப் போட்டால் தான் அழகாக இருப்பார்கள். மேக்-அப் போடாமலேயே சின்ன ஐயா அழகு. ஐயா சினிமாவில ஏன் நடிக்க வரவில்லை. ஒருவேளை பெரிய ஐயா திட்டுவாங்களோனு வரலைனு நினைக்கிறேன். சினிமாவுக்கு வந்திருந்தால் இன்னைக்கு அவர்தான்யா சிஎம்’’ எனப் பேசினார்.
பாமக என்றாலே சினிமாவை எதிர்ப்பவர்கள். சினிமா மோகம் தான் இளைஞர்களை சீரழிக்கிறது என்று கருத்துக் கூறுபவர்கள். ரஜினியின் பாபா படம் முதல் சர்கார், சமீபத்தில் வெளிவந்த ஜெய் பீம் படங்கள் வரை எதிர்ப்பு கிளப்பியவர்கள் என்றே எல்லோரும் அறிந்திருந்தும், சினிமாவுக்கு அன்புமணி வந்திருந்தால் அவர்தான் சிஎம் என ஜாகுவார் தங்கம் பேசியிருப்பது பெரிய அதிர்ச்சியை ஒன்றும் கொடுக்கவில்லை.
காரணம் ராமதாஸே முன்பு ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மதுக்குடிப்பது, சிகரெட் பிடிப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களால் ராமதாஸுக்கு சினிமா என்றாலே அலர்ஜி என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. ஆனால், அவரும் சினிமாவில் நடித்திருக்கிறார் என்பதுதான் இங்கு ஆச்சர்யத் தகவல்.
கார்வண்ணன் இயக்கத்தில் முரளி, ரோஹினி நடித்து 1995ம் ஆண்டு வெளியான ’தொண்டன்’ படத்தில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் டாக்டர் கதாபாத்திரத்தில் ராமதாஸ் நடித்திருக்கிறார். குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில், மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராகவே தோன்றி, ராமதாஸை பாராட்டி பேசுவதுபோல் ஒரு காட்சி இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
இதே போல், சந்திரசேயன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான ’இலக்கணம்’ படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமானப் படம். எதனால் அப்படி சொல்கிறோம் என்றால், நமக்கு அரசியல்வாதிகளாகவும் சமூகவாதிகளாகவும் மட்டுமே பழக்கப்பட்ட சிலர், இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பெரியார் மீது பற்றுள்ள பத்திரிக்கையாளனாக விஷ்ணுபிரியன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு மாமாவாக நடித்திருப்பது பாமக கட்சிக்காக கடுமையாக உழைத்த காடுவெட்டி குருதான்..!