கேரளா, தமிழகத்தில் தோற்றால்தான் பாஜக கொட்டம் அடங்கும்... பாஜகவை தாறுமாறாக தாக்கிய ப. சிதம்பரம் ...!
கேரளா, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றால்தான் அதன் கொட்டம் கொஞ்சம் அடங்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பங்கேற்று பேசினார். “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயமாகத் தேவை. அதிமுகவை 3 மாதங்களிலும், பாஜகவை 3 ஆண்டுகள் கழித்தும் தோற்கடிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக, பாஜக அதிகாரம், பணப்பலத்துடனும், அதிகார துஷ்பிரயோகத்துடனும் சந்திக்க உள்ளன.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நரேந்திர மோடி அலை என்றார்கள். ஆனால், அதை கேரளா, தமிழகம், ஆந்திரா ஆகிய தென்மாநிலங்கள் தடுத்து நிறுத்தின. தற்போது கேரளா, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றால், அதன் கொட்டம் கொஞ்சம் அடங்கும். இல்லாவிட்டால் அவர்களின் ஆணவம், அகந்தையை அடக்க முடியாது. ஒரு கட்சி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் நான்தான் நிரந்தர முதல்வர், நான்தான் நிரந்த பிரதமர் என்ற ஆணவம் வந்துவிடும்.
அமெரிக்கர்கள் புத்திசாலிகள். அதனால்தான் 8 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்காத அளவுக்கு சட்டம் வைத்திருக்கிறார்கள். பாஜகவை அகில இந்திய அளவில் எதிர்க்கக்கூடிய கட்சி என்றால், அது காங்கிரஸ் மட்டுமே. மதுரை எம்.பி. கடிதம் எழுதினால், மத்திய அமைச்சர் இந்தியில் பதில் அளிக்கிறார். தமிழக முதல்வர் தாயார் மறைவுக்குக்கூட அமித்ஷா இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் என்ன ஓர் ஆணவம்.
சென்னை தரமணியில் உள்ள தமிழ் செம்மொழி நிறுவனத்தை மைசூருவில் உள்ள பல மொழி நிறுவனத்தில் ஒரு பிரிவாகச் சேர்க்க உள்ளனர். இதை யாராவது ஏற்க முடியுமா? இந்தி அல்லாத பிற மொழிகளை மேம்படுத்த 22 கோடிதான் ஒதுக்கியுள்ளனர். ஆனால், சமஸ்கிருதத்துக்கு ஆயிரம் கோடி ஒக்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 8 கோடிப் பேரில் 811 பேர்தான் சமஸ்கிருதம் பேசுகிறார்கள். அவர்களுக்காகப் பொதிகை டிவியில் 15 நிமிடங்கள் செய்தி வாசிக்கிறார்கள். இந்தியாவில் மூத்த நாகரீகம் தமிழ் என்பதை அறிய வேண்டும் என்றால் கீழடிக்குச் சென்று பாருங்கள். தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பாஜகவை கண்டாலே 99 சதவீதம் பயம். ஒரு சதவீதம் பக்தி.” என்று ப.சிதம்பரம் பேசினார்.