டெண்டர் விவகாரம் ஐஏஎஸ் பதவி ராஜினாமா...! ஐஏஎஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக சேர்ந்தார் சந்தோஷ்பாபு ஐஏஎஸ்.!
தமிழகத்திலும் தலைநகர் சென்னையிலும் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் ராஜினாமா செய்துவிட்டு சென்னை ஆபீசர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக இணைந்துள்ளார்.
தமிழகத்திலும் தலைநகர் சென்னையிலும் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் ராஜினாமா செய்துவிட்டு சென்னை ஆபீசர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக இணைந்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில் அவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றிருப்பது உயர் மட்ட அரசியல் தலைவர்கள் உள்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் சென்னையில் உள்ள ஆபீசர் ஐ.ஏ.எஸ் அகாடமி சந்தோஷ் பாபு முழுநேர ஆசிரியாக சேர்ந்ததால் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் இந்த ஐ.ஏ.எஸ் அகாடமியில் சந்தோஷ் பாபு, மின் ஆளுகை, தொழில்நுட்பம், பொது அறிவு, பொது நிர்வாகம் போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க உள்ளார். அதோடு, ஆஃபிசர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் தலைமை வழிகாட்டியாக இருப்பார் என்று தெரிவிக்கின்றனர்.
சந்தோஷ் பாபு தங்கள் அகாடமியில் இணைந்திருப்பது குறித்து, ஆபீசர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்தோஷ் பாபு வகித்த ஒவ்வொரு பதவியிலும், அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். அவர் தனது வாழ்க்கையில் 250 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளையும் புதுமுயற்சிகளையும் தொடங்கியுள்ளார். ஐ.டி துறையின் முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அவர் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர். மேலும் அவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூரின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பட்டம் பெற்றவர். அவரது அசாதாரண சொற்பொழிவு திறன் கற்பித்தல் மீதான அவரது ஆர்வத்துடன் இணைந்து எங்கள் மாணவர்கள் பொது நிர்வாகிகளாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை அடைய உதவும்” என்று தெரிவித்துள்ளது. தமிழக அரசின் டெண்டர் விவகாரத்தில் இவருக்கும் அரசிற்கும் இடையே ஏற்பட்ட உரசல் ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்ய வைத்தது. இவரது ராஜினாமா தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.