I saw Jayalalithaa when she changed the hospital ward

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை, அமைச்சர்களோ கட்சியின் நிர்வாகிகளோ பார்க்கவில்லை என்றும், சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் சீனிவாசனைத் தொடர்ந்து வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை என்றும், இட்லி சாப்பிட்டதாக அப்போது நாங்கள் கூறியது பொய் என்றும் சொன்னார். அவரைத் தொடர்ந்து பொன்னையனும், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போலோ மருத்துவமனையில் நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார். 

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தது குறித்து அமைச்சர்கள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

செல்லூர் ராஜுவின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்-ம் கூறியுள்ளார். 

நிலோஃபர் கபில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனையில் வார்டு மாற்றும்போது தான் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறினார்.

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்தது குறித்து, அமைச்சர்களுக்கிடையே முரண்பாடு உள்ளது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பதாகவும் திமுகவின் துரைமுருகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.