"அம்மா இட்லி சாப்டத நானும் பாக்கல" பொன்னையனும் பகீர்!
ஜெயலலிதா சிகிச்சையின்போது மருத்துவமனையில் சசிகலா சொல்லச் சொன்னதையோ நாங்கள் (அமைச்சர்கள்), மக்களிடம் தெரிவித்தோம் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அண்மையில் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, அப்போலோவில் அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்று நாங்க சொன்னதெல்லாம் பொய் என்றும், எங்களை மன்னிச்சிடுங்கன்னும் பேசியிருந்தார்.
அமைச்சரின் இந்த பேச்சு, அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தற்போது பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த கருத்துக்களால், டிடிவி ஆதரவாளர்களை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து, பொன்னையனும் இது தொடர்பாக பேசியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்னவென்றே எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது, மருத்துவமனையில் சசிகலா குடும்பத்தைத் தவிர அமைச்சர்கள் யாரையுமே ஜெயலலிதா பார்க்கவில்லை என்றார்.
சசிகலா குடும்பத்தினர் சொல்ல சொன்னதையே நாங்கள் மக்களிடம் கூறினோம் என்றும் வருத்தம் தெரிவிக்க வேண்டியது சசிகலா குடும்பத்தான், நாங்கள் அல்ல என்றும் பொன்னையன் கூறினார்.