குடியரசு நாளில் சிஏஏவுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்... 70 லட்சம் பேர் பங்கேற்பு... தெறிக்கவிட்ட கேரளா!
சிஏஏ சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து கேரள அரசு பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துவருகிறது.
குடியரசுத் தின நாளில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக கேரளாவில் 620 கி.மீ. தொலைவுக்கு 70 லட்சம் பேர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு எதிராகக் குதித்துள்ளன. சிஏஏ சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து கேரள அரசு பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துவருகிறது.
இந்நிலையில் குடியரசுத் தினமான இன்று சிஏஏவுக்கு எதிராக மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்னணி நடத்தியது. இந்த மனிதச் சங்கிலி போராட்டம் கேரளாவின் வடக்கே காசர்கோடு நகரில் தொடங்கி, தெற்கே களியக்காவிளை வரை நடைபெற்றது. 620 கி.மீ தூரத்துக்கு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் சுமார் 60 - 70 லட்சம் கேரள மக்கள் பங்கேற்றனர். மனித சங்கிலியில் பங்கேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.