#BREAKING பெண்களும் அர்ச்சகராகலாம்... இந்து அறநிலையத்துறையின் அடுத்த அதிரடி...!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைச் செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது, தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைச் செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது, தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: தற்போது முழு ஊரடங்கு என்பதால் கோயில்கள் திறக்கப்படவில்லை, ஆனால் பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது. இன்றைய ஆலோசனை கூட்டத்தில் திருக்கோயில்களில் எத்தனை பேர் பணியாற்றி வருகிறார்கள், காலி பணியிடங்கள் எத்தனை என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தெரிவித்தார்.
எங்கெல்லாம் அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்களுக்கு உடனடி தேவை இருக்கிறதோ? அவர்களை உடனடியாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு பலகை கோயில்களில் வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் மற்றும் செல்போன் எண்ணும் அறிவிப்பு பலகையில் இடம் பெறும் எனத் தெரிவித்தார்.
மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனதும் புண்படக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே திருச்சி ஜீயர் நியமனத்திலும் தொடர்ந்து எந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்ததோ, அதே நடைமுறையே பின்பற்றப்படும் என உறுதி அளித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை போல பெண்களும் விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.