மிகப்பெரும் பொருளாதார புரட்சியை ஜி.எஸ்.டி. உருவாக்கி இருக்கிறது - பெருமிதத்தில் மிதக்கும் தமிழிசை சௌந்தரராஜன்...
தூத்துக்குடி
மிகப்பெரும் பொருளாதார புரட்சியை ஜி.எஸ்.டி. உருவாக்கி இருக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருநெல்வேலியில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளத்துக்கு வந்தார்.
அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பளித்த பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருவதால் தென் தமிழக மக்கள் அதிகளவு பயன் பெறுவர். மருத்துவ தலைநகரமாக மதுரை மாற இருக்கிறது.
சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலை பற்றி விழிப்புணர்வு தேவை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். அதேநேரத்தில் பசுமை வழிச்சாலை தமிழகத்திற்கு மிகுந்த பலன் தரும். பசுமை வழிச்சாலை பற்றிய விழிப்புணர்வு முகாம்களை மாநில அரசு நடத்த வேண்டும்.
இன்று (அதாவது நேற்று) இன்னொரு முக்கியமான தினம் ஜி.எஸ்.டி. கொண்டுவந்து ஒரு வருடம் ஆகிறது. மிகப்பெரும் பொருளாதார புரட்சியை ஜி.எஸ்.டி. உருவாக்கி இருக்கிறது.
இதன்மூலம் வசூலிக்கப்படும் தொகை ரூ.13 இலட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.12 இலட்சம் கோடியை விட அதிகம். நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கப்படுகிறது.
தூத்துக்குடி கலவரம் மக்களால் நடத்தப்பட்டது அல்ல. மக்கள் மட்டுமே அந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தால் கலவரம் வெடித்து இருக்காது.
மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பினர் தங்களை மூளைச்சலவை செய்தனர் என்று மக்களே தெரிவித்துள்ளனர். இதனைத்தான் முதலில் இருந்தே நாங்கள் கூறி வந்தோம்.
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து இருப்பதாக கருத்து தெரிவித்தவர்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்ச்சித்தன. இன்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
காவிரி தொடர்பாக கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி உள்ளார்கள். இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி முடிந்துபோன பிரச்சனை. மத்திய அரசை பொறுத்தவரை நிறைவான தீர்வை நோக்கி காவிரி நகர்ந்து கொண்டிருக்கிறது. மறுபடியும் கர்நாடகாவில் காவிரி அரசியலாகி உள்ளது. அதனை நாம் அரசியல் ஆக்க வேண்டாம்.
பா.ஜ.க கட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிரானது என்று கூறுகிறார்கள். ரூ.57 கோடி ஹஜ் மானியம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி நக்வி தெரிவித்துள்ளார்" என்று அவர் கூறினார்.