தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கலாம்.. முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து வருகிற 7ம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து வருகிற 7ம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதல் அலையை விட கொரோனா 2வது கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு வருகிற 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிகை குறைந்து, குணமடைகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக படிப்படியாக குறைந்து 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. மேற்கு மாவட்டத்தில் மட்டுமே பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. மேலும், தமிழகத்தில் ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். இதனால், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னை மண்டலத்தில் பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டாலும் மேற்கு மண்டலத்தில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மண்டலத்துக்குள்ளே ஈரோட்டில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கோவையில் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கி இருக்கிறது.
குறைந்த தொற்று விகிதம் மற்றும் காலியான மருத்துவமனை வார்டுகளை கொண்ட ஒரு மண்டலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. சுகாதார கொள்கைகள் பொருளாதார உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலான தொற்று நோய் காரணிகளின் அடிப்படையில் தடைகளை நீட்டிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். மேலும், வெவ்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் வித்தியாசங்கள் நிலவுவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தலாம். முதலில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.