Governor Vidyasagar Rao get on a plane to tamilnadu for Ministers crisis

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் தளவாய் ஆகியோர், அத்துமீறி நுழைந்து அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்பட்டது.

இதையடுத்து, ஆதாரங்களை அழித்தல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ், அவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வருமானவரி அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.

ஆனால், அவர்கள் மீது இதுவரை, காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், அந்த அமைச்சர்களும், முன் ஜாமீன் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து இன்று அவசரமாக சென்னை வந்து, இந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்த உள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் இது பட்டறையை தகவல்களை முதலில் கேட்டறியும் ஆளுநர், அதன் பிறகு முதல்வர் பழனிசாமியிடம் பேச உள்ளார்.

அதனால், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், கடம்பூர் ராஜு ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், மூன்று அமைச்சர்களும், தளவாய் சுந்தரமும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரிடம், ராஜினாமா கடிதம் பெறுவதற்காக தம்பிதுரை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

அவருடைய ராஜினாமா தகவல் வெளியாவதற்கு முன், அதிகாரிகளின் சோதனைக்கு இடையூறு செய்த மற்ற அமைச்சர்களின் பதவி நீக்க அறிவிப்பு வெளியாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.