”அதிகாரம் எது என்று ஆளுநருக்கு தெரியும்” - வக்காலத்து வாங்கும் மாநில பாஜக...!
ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை என்றும் அதிகாரத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.
பின்னர், தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கோவையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
ஆளுநரின் இத்தகைய ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆளுநரின் திடீர் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது எனவும் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
இதுகுறித்து முத்தரசன் பேசுகையில், மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருக்கையில் ஆளுநர் ஆலோசனை நடத்துவது ஏன் என்றும் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசிப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளுடன் அரசு கூட்டம் நடத்தவில்லை எனவும் அதனால் தான் ஆளுநர் அந்த வேலையை செய்கிறார் எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை என்றும் அதிகாரத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூற முடியாது எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.