சட்டப்பேரவையை மாற்ற கோரிக்கை வைத்த அரசு ஊழியர்கள்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்ன நச் பதில்!
சென்னை ஓமாந்தூரர் அரசினர் தோட்டத்துக்கு மீண்டும் சட்டப்பேரவையை மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2006 - 2011-ஆம் ஆண்டு கால கட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயகலத்தைப் பார்த்து பார்த்து கட்டினார். புதிய தலைமை செயலகத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு புதிய தலைமைச் செயலகத்தை அரசு பன்னோக்கு மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றினார். இதனையடுத்து இக்கட்டிம் மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் திறக்கப்பட்டபோது அகற்றப்பட்ட அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயர்கள் இடம் பெற்றிருந்த கல்வெட்டை, மீண்டும் ஓமாந்தூரார் வளாகத்தில் வைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சட்டப்பேரவையை மாற்ற வேண்டும் என்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.க்கள் பலர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு தலைமை செயலகத்தை மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும் என அரசு ஊழியர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு உள்பட 13 அறிவிப்புகளை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவிக்க தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் செ.பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினிடம், ‘தமிழ்நாடு தலைமை செயலகத்தில் இடப்பற்றாக்குறையால் ஏற்படும் இன்னல்களால் எடுத்துரைத்தனர். மேலும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்துக்கு தலைமை செயலகத்தை மீண்டும் மாற்றம் செய்ய வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்ததாக தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.