கன்னத்தைக் தடவிய கவர்னர்….. பெண் நிருபரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் சர்ச்சை !!
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூர்யில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் செயலுக்கு தூண்டியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ வாட்ஸ் அப்பில் சமீபத்தில் வெளியானது.
அதில் மாணவிகள் 4 பேரை தவறான வழிக்கு அழைத்து செல்வது போன்று உரையாடல் அமைந்து இருந்தது. உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளிடம் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி பேரம் பேசியது தெரியவந்தது.
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியையிடம் உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் நியமனம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநர், துணை வேந்தர், பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் கிண்டி ராஜ் பவனில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அப்போது பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது, முட்டாள்தனமானது என குறிப்பிட்டார்.
நிர்மலா தேவியை நான் பார்த்ததேயில்லை. அவர் யார் என்பதே எனக்குத் தெரியாது. என்னைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருப்பார்கள். என்னைக் கேட்கமால் காகா குருவி கூட என்னைப் பார்க்க முடியாது என்றும் கவர்னர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின், பல்வேறு கேள்விகளை எழுப்பிய பெண் பத்திரிக்கையாளரை லட்சுமி சுப்ரமணியன் என்பவரை பாராட்டும் விதமாக அவரது கன்னத்தில் ஆளுநர் செல்லமாக தடவினார்.
ஆளுநரின் இந்த செயல் அந்த பெண் பத்திரிகையாளர் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வந்த கவர்னர், மீண்டும் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.