தேர்தல் ரிசல்ட்டுக்கு முன்பே முழு ஊரடங்கு... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அழுத்தம்..!
மே 1, 2ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பணி தொடர்பான வாகனங்களை மட்டும் இரண்டு நாட்களில் அனுமதிக்கலாம்
மே 1, 2ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. பணி தொடர்பான வாகனங்களை மட்டும் இரண்டு நாட்களில் அனுமதிக்கலாம் எனவும், வாக்கு எண்ணிக்கையின் போது கூட்டம் கூடுவதை தவிர்க்க லாக்டவுன் அமல்படுத்தலாம் என்றும் ஊரடங்கு அறிவிப்பை ஏப்ரல் 28ல் வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் வேறு மாநிலத்துக்கு திருப்பி அனுப்புவது, ரெம்டெசிவிர் மருந்து மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பான பத்திரிகை செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ரெம்டெசிவிர், தடுப்பூசி மருந்து மற்றும் ஆக்சிஜன் இருப்பு விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, புதுச்சேரியில் முழு ஊரடங்கை அறிவிக்க கோரிய வழக்கிலும், இந்த விவரங்களை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ரெம்டெசிவிர், தடுப்பூசி மருந்து மற்றும் ஆக்சிஜன் இருப்பு நிலவரம் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடர்பாக தலைமை நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார துறை செயலாளர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கு தனி மையம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும், கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து மாநில அரசுடன் கலந்து பேசி தான் முடிவெடுக்கப்பட்டதாகவும், தற்போது மாநில அரசு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, வெண்டிலேட்டர், படுக்கைகள் மற்றும் தடுப்பூசி சப்ளை பொருத்தவரை போதுமான அளவில் இருப்பதாக அரசு கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ரெம்டெசிவர் குறித்து மக்களுக்கு விரிவான விளம்பரம் கொடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.இதனிடையே, வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், அதில் எந்த சமரசமும் செய்ய கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள்,வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் மற்றும் மே 2-ம் தேதி அன்றும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்கலாம் என கூறியுள்ளனர்.
அதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இதுகுறித்த அறிவிப்பை ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடலாம் எனவும் நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.வாக்கு எண்ணிக்கை தினத்தில், அது தொடர்புடைய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கலாம் என யோசனை தெரிவித்த நீதிபதிகள்,இரு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்து, வழக்குகள் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.