ஆவின் பால் பாக்கெட்டுக்குள் தவளை... அதிர வைக்கும் குற்றச்சாட்டு..!
பால் பாக்கெட்டிற்குள் தவளை எப்படி போயிருக்கும் என்று குழம்பிப்போன அதிகாரிகள் புகார் அளித்த நபரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், வானமாமலை பகுதியை சேர்ந்தவர் சிவநேசன். இவர் ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் தவளை இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவநேசன் ஆவின் பாலக முகவர் பாஸ்கரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் புகார் கொடுக்கப்பட்டது. பால் பாக்கெட்டில் தவளை இருந்தது உண்மையா என ஆவின் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் ஐங்கரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். நன்றாக பேக் செய்யப்பட்டிருந்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்த சம்பவம் திருக்கோவிலூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பால் பாக்கெட்டிற்குள் தவளை எப்படி போயிருக்கும் என்று குழம்பிப்போன அதிகாரிகள் புகார் அளித்த நபரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.