முட்டி மோதும் முன்னாள் அதிகாரி... மிரண்டு போய்க் கிடக்கும் திமுக நிர்வாகிகள்..!
கட்சிக்கு நிதி, தேர்தல் செலவுகளை தாராளமாக செய்வார் என்பதால் சீட்டை அவர் தட்டிக்கொண்டு போய் விடுவார் என மற்ற கழக நிர்வாகிகள் கவலையில் இருக்கிறார்கள்.
திமுகவில் முன்னாள் அதிகாரி சீட் கேட்பதால் அவரைப்பார்த்து மிரண்டு போய்க்கிடக்கிறார்கள் கழக உடன்பிறப்புகள். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி உருவான பின் நடந்த மூன்று தேர்தல்களிலும் தி.மு.க., வெற்றிபெறவில்லை. அதனால் வரும் சட்டமன்றத்தேர்தலில் எப்பாடு பட்டாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது திமுக.
கடந்த தேர்தலில் தோற்றுப் போன பிரபு ராஜசேகர், முன்னாள் எம்.பி., தாமரைச்செல்வன் உட்பட பலர் சீட் கேட்டிருக்கிறார்கள். நெடுஞ்சாலை துறையில் தலைமை பொறியாளராக இருந்து, ஓய்வு பெற்ற ஜெயராமனும் சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இவருக்கு சொந்தமாக பல கல்வி நிறுவனங்கள் இருக்கிறது. கட்சிக்கு நிதி, தேர்தல் செலவுகளை தாராளமாக செய்வார் என்பதால் சீட்டை அவர் தட்டிக்கொண்டு போய் விடுவார் என மற்ற கழக நிர்வாகிகள் கவலையில் இருக்கிறார்கள். இப்படி பணம் இருக்கிறவர்களாக பார்த்து 'சீட்' கொடுத்தால் ஏழை, எளியவர்கள் எல்லாம் எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகவே முடியாதே என நொந்து கொள்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.