இருதய பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேணுகோபாலின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று  உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

திருவண்ணாமலையில் திமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் (87) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் த.வேணுகோபால் (87). இவரது மனைவி உத்திரம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இளம் வயதில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். 8 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 18 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். வயது மூப்பு காரணமாக அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாமல் ஓய்வில் இருந்து வந்தார். 

இதையும் படிங்க: அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் இவரா? அப்படினா ஜெகத்ரட்சகன் ஒரம்கட்டப்படுகிறாரா?

இந்நிலையில், இருதய பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேணுகோபாலின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் தியாகி வேணுகோபால் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இன - மான - மொழியுணர்வோடு திராவிட இயக்கப் பட்டறையில் வார்ப்பிக்கப்பட்ட கொள்கை தீரரான வேணுகோபால் அவர்கள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் - ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றியவர். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.

இதையும் படிங்க: சிவகங்கையை குறி வைக்கும் திமுக பிரமுகர்கள்: உதயநிதி சேனல் வழியாக காய் நகர்த்தும் சினிமா புள்ளி?

வேணுகோபால் அவர்கள் 40 ஆண்டுகள் மாவட்ட அவைத்தலைவராக இருந்தவர். 2019-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற கழக முப்பெரும விழாவில் தந்தை பெரியார் விருதை அவருக்கு வழங்கி மகிழ்ந்த தருணத்தைத் தற்போது எண்ணிப் பார்த்து நெகிழ்கிறேன். அன்னைத் தமிழ் காக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்ற ஆற்றல்மிகு செயல்வீரரான, அனைவரது நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொண்டரான வேணுகோபால் அவர்களின் மறைவு கழகத்துக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.