கைது செய்வதற்கான தடை ஜூன் 9ம் தேதி முடிந்த நிலையில், மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகை அளித்த பாலியல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருமணம் செய்து கொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என, நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூன் 9ம் தேதி வரை மணிகண்டனைக் கைது செய்யக் கூடாது என, இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து, இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது. அவர் 3 முறை கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்துள்ளார். அதேபோல், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது. ஆகையால், அவரிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இதுவரை விசாரணைக்கு அவர் ஆஜராவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனவே அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனு வை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். கைது செய்வதற்கான தடை ஜூன் 9ம் தேதி முடிந்த நிலையில், மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.