சென்னை கோயம்பேடு பழக்கடைகளுக்குள் திபுதிபுவென நுழைந்த அதிகாரிகள்.. 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்.. அழிப்பு..
சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 7 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 7 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு வருகின்றன.மாம்பழங்களை விரைவில் பழுக்கவைக்க கார்பைடு கற்கள் பயன்படுத்தப் படுகிறது என்று புகார்கள் உள்ளன.
இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ்சந்திரபோஸ் , மற்றும் 10க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கோயம்பேடு பழச் சந்தையில் உள்ள 200க்கும் மேற்பட்ட பழக் கடைகளில் தீடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தபோது, சென்னையில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் 10 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கோயம்பேடு பழச் சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கார்பைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 7 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில்கார்பைடு கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் கார்பைடு கற்கள் அனைத்தும் அழிக்கப்பட உள்ளது என்றார். பின்னர் பழ வியாபாரிகளுக்கு கார்பைடு கற்களால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.