அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, 3 தொகுதிகளிலும் பறக்கும் படையினர் பணியை தொடங்கி உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, தேர்தலை நிறுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனை அடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் உடல் நலக் குறைவால் காலமானார். இதனை அடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதியிலும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் தேர்தல் பார்வையாளர்களாக 6 பேர் தமிகம் வர உள்ளதாக தெரிவித்தார். ஒரு தொகுதிக்கு 2 பார்வையாளர்கள் என 6 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் நவ.3 ஆம் தேதி தமிழகம் வருவதாகவும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை கண்காணிக்கப்படும் என்றும் தேர்தல் பறக்கும் படையின் பணி தொடங்கி உள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
