கடந்த மாதம் எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், விபத்துக்கு உள்ளான ஒரு கப்பலில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் பரவியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடலில் படர்ந்து இருந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் துறைமுக ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், கடலோர காவல் படையினர் என நூற்றுக்கணக்கானோர் சுமார் 20 நாட்களுக்கு மேலாக ஈடுபட்டனர். ஆனாலும், ஆங்காங்கே திட்டு திட்டாக எண்ணெய் கசிவு மிதந்து வருகிறது.

குறிப்பாக எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை கடலில் எண்ணெய் படலம் மிதந்ததால், மீன்கள் மற்றும் ஆமைகள் செத்து கரை ஒதுங்கின. அதே நேரத்தில் மீனவர்கள் கடலில் வீசும் வலைகளில் எண்ணெய் கசிவு ஒட்டி கொள்வதால், அவர்களது தொழில் பாதிப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் கேள்வி குறியானது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.15 கோடி நிவாரண நிதி ஒதுக்கியுள்ளார். மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ள 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எண்ணூர் மற்றும் நொச்சிக்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.75 லட்சத்தில் மீன் சந்தை அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.