தஞ்சையில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்த போது பாஜகவினர் சிலரே அங்கு நமக்கு பெரிய அளவில் பேஸ் இல்லையே, நாம் ஏன் கோவை, நாகர்கோவில் போன்ற இடங்களை மையமாக வைத்து வேறு போராட்டங்களை நடத்தலாமே என்று பேசிக் கொண்டனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை அண்ணாமலையே முன்னின்று நடத்தினார். 

கர்நாடக மாநில பாஜக அரசுக்கு எதிராக தமிழக பாஜக தஞ்சையில் நடத்திய போராட்டத்தில் திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை தான் தற்போது அக்கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய ஹாட் டாபிக்காகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு வழக்கமாக யாராக இருந்தாலும் டெல்லியில் இருந்து சென்னை வருவது வழக்கம். ஆனால் இந்த வழக்கத்தை மாற்றி டெல்லியில் இருந்து நேராக கோவை சென்றார் அண்ணாமலை. ஏனென்றால் தமிழகத்தில் பாஜக வலுவாக இருக்கும் முக்கியமான இடம் கோவையாகும். இதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக இரண்டு நாட்கள் பயணம் செய்து சென்னை வந்தடைந்தார். வரும் வழியில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை அண்ணாமலை சந்தித்தார்.

இதன் பிறகு சென்னை வந்து பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு மறுபடியும் முக்கியமான நகரங்களுக்கு சென்று பாஜக முன்னோடிகளை சந்தித்து ஆசி பெற்றார். இதன் பிறகு மிக முக்கிய நகர்வாக தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தார் அண்ணாமலை. அதாவது மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், எனவே அந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை.

தஞ்சையில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்த போது பாஜகவினர் சிலரே அங்கு நமக்கு பெரிய அளவில் பேஸ் இல்லையே, நாம் ஏன் கோவை, நாகர்கோவில் போன்ற இடங்களை மையமாக வைத்து வேறு போராட்டங்களை நடத்தலாமே என்று பேசிக் கொண்டனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை அண்ணாமலையே முன்னின்று நடத்தினார். அண்ணாமலை தலைமையிலான இந்த போராட்டத்தில் சில நூறு பேர் கலந்து கொள்வதே பெரிது என்கிற ரீதியில் தான் தகவல்கள் இருந்தன. தமிழக உளவுத்துறையும் கூட பெரிய அளவில் கூட்டம் கூடும் என்று கணிக்கவில்லை.

ஆனால் தமிழகம் முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள் முதல் நாளே தஞ்சைக்கு படையேடுத்தனர். இதனால்தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற இடங்களில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல் ரூம்கள் நிறைந்து வழிந்தன. தொடர்ந்து மறுநாள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து தொண்டர்களும் தஞ்சையில் குவிந்தனர். இதனால் தஞ்சையில் திரும்பிய பக்கம் எல்லாம் பாஜகவினராகவே தென்பட்டனர். போராட்டம் நடைபெறும் சமயத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்துவிட்டனர். கூட்டத்தை பார்த்து பாஜகவினரே ஆச்சரியப்பட ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கு முன்பு தலைவராக இருந்த எல்.முருகன் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வேல் யாத்திரை நடத்தினார். ஆனால் அப்போது பெரிய அளவில் எங்கும் கூட்டம் கூடவில்லை. ஆனால் முதல் போராட்டத்திலேயே அண்ணாமலை கூட்டிய கூட்டம் அக்கட்சியினர் மத்தியில் அவர் இமேஜை அதிகமாக்கியது. இதே போல் உண்ணாவிரதம் தொடங்கிய போதும் நிறைவின் போதும் அவர் பேசிய பேச்சுகள் பாஜகவினரை கவனிக்க வைத்தது.