நகர்ப்புறங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். சுமார் 90 சதவீதத்துக்கும் மேல் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை மிக உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
கோவையில் தாமரையை மலர வைக்க வேண்டும். மக்களின் காலில் விழுந்துகூட வாக்கு சேகரிக்க தயங்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு மாவட்டமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அண்ணாமலை, கோவையில் இன்று பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். வடவள்ளியில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், “தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நமக்கு 11 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே, தேர்தலில் வெற்றி பெற அனைவரும் மிகக் கடினமாக உழைக்க வேண்டும். மக்களை வீடுகளுக்கே சென்று தினமும் சந்தியுங்கள். அவர்களோடு கலந்துரையாடலில் ஈடுபடுங்கள். காலில் விழுந்துகூட வாக்கு சேகரிக்க தயங்க கூடாது.

கோவையில் தாமரையை வானதி அக்கா மலர வைத்தார். அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் மூலம் தாமரையை நீங்களும் மலர வைக்க வேண்டும். நகர்ப்புறங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். சுமார் 90 சதவீதத்துக்கும் மேல் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை மிக உன்னிப்பாக கவனிக்கிறார்கள். எனவே, வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துங்கள். உங்களது புத்திகூர்மை மூலம் அனைத்து மக்களையும் நீங்கள் சென்றடைய வேண்டும். அதற்கு உங்கள் கையில் இருக்கும் செல்போன் மிக முக்கியமான ஆயுதம். காரில் செல்லும்போதும்கூட செல்போனில் மக்களிடம் பேசுங்கள்.

ஒரு நாளும் மக்களோடு பேசாமல் இருந்துவிடாதீர்கள். ஊரின் முக்கிய தலைவர்கள், சமூகத்தில் முக்கியமாகப் பங்காற்றியவர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் எனத் தினமும் 50 முதல் 100 பேரிடம் பேசுங்கள். அதைத் தாண்டி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைதளங்களையும் முழுமையாகப் பயன்படுத்துங்கள். கட்சி தலைமையகத்திலிருந்து வரும் வீடியோக்களையும் உங்களின் பிரச்சாரங்களையும் மக்களுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனுப்பி வையுங்கள்” என்றார்.
