துணை முதலமைச்சர் சந்தித்து கதறிய மணிகண்டன் ! மௌனம் காத்த ஓபிஎஸ் !!
அமைச்சர் பதவியை இழந்த மணிகண்டன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மாட்டேன் என தெரிவித்திருந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸை சந்தித்துப் பேசினார். ஆனால் கதறி அழுத தன்னை ஓபிஎஸ் அலட்சியம் செய்ததால் மணிகண்டன் கடுப்பாகியுள்ளார்.
தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டன் கடந்த புதன்கிழமை நீக்கப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், கேபிள் கட்டணம் குறைப்பு பற்றி முதல்வர் தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்று தெரிவித்திருப்பதும், கால்நடை அமைச்சர் மற்றும் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மனுமான உடுமலை ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேசியதும் தான் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மன் பதவியில் அமர வைத்தது குறித்து எடப்பாடிக்கும், மணிகண்டனுக்கும் பிரச்னை ஏற்பட்டது தான் பெரிய காரணமாக சொல்லப்பட்டது.
இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து சென்னை திரும்பிய மணிகண்டன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் மணிகண்டன் சென்னை வந்தவுடன் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
மணிகண்டன் சொல்லிய அனைத்துப் புகார்களையும் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ் அவருக்கு ஆதரவாக எந்த பதிலையும் கொடுக்காததால் மணிகண்டன் கடுப்பில் சென்றதாக அவரதது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் உட்கட்சி பூசலால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.