இ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிதான் அதிமுக...! தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது ஏன்?
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஓ.பி.எஸ்., இபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, அதிமுக கட்சி பெயரும், இரட்டை இலை சின்னமும் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்த பொது செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதற்கு இணையான அதிகாரங்கள் கொண்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாள்ர பதவிகள் கொண்டு வரப்பட்டன.
இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம நடந்த அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதிமுக கட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த மாற்றங்கள், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில், அதிமுக கட்சி விதியிலும் அமைப்பு ரீதியாகவும் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது.
இதன்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை கூட்டும் அதிகாரம் பெற்றுள்ளனர். இது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஓ.பி.எஸ்.,-இ.பி.எஸ்., அணிதான் அதிமுக அணி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.