தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு அத்துமீறிய ஆதரவு அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மூன்று தொகுதி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் வழங்குவதற்குவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா கையெழுத்திடுவதற்கு பதிலாக கைரேகை பதிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் காட்டிய மின்னல் வேகமும், தேர்தல் விதிகளுக்கு மாறாக நடந்துள்ள அடுக்கடுக்கான குளறுபடிகளும் பல ஐயங்களை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளார்..

சின்னம் ஒதுக்கீட்டுக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அதற்கான அதிகாரம் பெற்றவரின் கையெழுத்து மட்டுமே இடம் பெற வேண்டும் என்ற நிலையில், அதற்கு பதிலாக கைரேகையிட்டால் போதுமானது என்ற சலுகையை ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் எந்த அடிப்படையில் வழங்கியது என்பது தெரியவில்லை.
1968&ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஆணையின் 13ஆவது விதி தான் சின்னங்கள் ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டுகின்றன. இவ்விதியின்(e) உள்விதிப்படி ஏ மற்றும் பி படிவங்களில் மையால் மட்டும் தான் கையெழுத்திடப்பட்டிருக்க வேண்டும். அச்சு மூலமாகவோ, முத்திரை மூலமாகவோ கையெழுத்திடப்பட்டிருந்தாலும், படிவங்கள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டாலும் அவை நிராகரிக்கப்பட வேண்டும்.
ஆனால், தேர்தல் ஆணையமோ, ஏ மற்றும் பி படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்திடாமல் இருக்க சலுகை அளித்திருக்கிறது. இது அதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்துமீறிய ஆதரவாகும்.
இவை அனைத்தையும் தாண்டி, இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு உதவ தேர்தல் ஆணையம் காட்டிய வேகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. படிவங்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை பதிக்க அனுமதி கோரும் அதிமுகவின் கடிதம் கடந்த 26-ஆம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அளிக்கப்படுகிறது.
கடிதம் கிடைத்த அடுத்த நிமிடமே, அக்கடிதத்தை அவசர, அவசரமாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புகிறார். இந்திய தேர்தல் ஆணையமும், அதற்கு வேறு வேலையே இல்லை என்பதைப் போல அடுத்த நாளே அதிமுகவுக்கு சாதகமாக கடிதம் எழுதுகிறது. தேர்தல் ஆணையம், இந்த சிக்கலான விஷயத்தில் மின்னல் வேகத்தில் முடிவெடுத்தது எப்படிஎன்பது தான் மில்லியன் டாலர் வினா என கேள்வி எழுப்பிய ராமதாஸ்,
தேர்தல் விதிகளிலும், நடைமுறைகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதையே இந்நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன என ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
